Thursday, June 11, 2015

பதிவு 5 - சான்றோரே சத்திரியர் என்பதற்கான மேலும் சில ஆதாரங்கள்.

சான்றோரே சத்திரியர் என்பதற்கான ஆதாரமாக, அவர்கள் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும் சான்றோரின் குணநலன்களாக சங்க நூல்கள் கூறுவன.

சான்றோர் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும் சான்றோரின் குணநலன்களும்..
“பண்டும், தாமறி செம்மைச் சான்றோர் “ – குறுந்தொகை 256:3.
“சான்றோர், புகழு முன்னர் நாணுப,
பழியாங் கொள்பவோ காணுங் காலே” –குறுந்தொகை -252: 67,68.
புகழப்படும் முன்னரே நாணம் கொள்ளும் தன்மை வாய்ந்த சான்றோர், பழிச்சொல்லை எவ்வாறு தாங்கிக்கொள்வார்?
“கடிப்பிடு கண்முரசம் காதகத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூவுலகுங் கேட்குமே சான்றோர்
கொடுத்தா ரேனப்படுஞ் சொல்” – நாலடியார், 100.
முரசு ஒலி காதுதூரம் கேட்கும். இடியோசை யோசனை தூரம் கேட்கும். சான்றோர் கொடுப்பதாலுண்டாகும் புகழோ மூவுலகும் கேட்கும். இங்கு சான்றோர் என்பது தானம் செய்யும் கடமையுள்ள அரசகுலத்தவரையே!
“எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு” – குறள்
“ஊழி பெயரினும் தாம்பெயராய் சான்றாண்மைக்கு
ஆழி யெனப்படு வார்” -குறள் 989.
“சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலத்தான்
தாங்காது மன்னோ பொறை” – குறள் 990.
“சான்றோர் செல்வம் என்பது , சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே” –நற்றிணை (2.10)
அடைக்கலமாக வந்தோரின் துன்பம் கண்டு வருந்தும் மென்மையான உள்ளமே சான்றோரின் உண்மையான செல்வமாம்.
சான்றோர் நிவாகச் சபையில் அமர்ந்து வழிநடத்தினர், மன்றங்களில் அமர்ந்து நீதி வழங்கினர் என்பதை சில பாடல்கள்..
“சான்றோர் முன் மன்றில் கொடும்பாடு உரைப்பானும்”
- திரிகடுகம்
“நெறி அறிசெறிகுறி புரிதிரிபு அறியா அறிவை முந்துறீஇ
தகை மிகுதொகை வகை அறியும் சான்றவர் இனமாக”
-கலித்தொகை 39: 46,47
“ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே”- தண்டியலங்காரம் 126 சூ
“மன்றத்துக் கண்டாங்கே சான்றோர்”
-முல்லைக்கலி 110: 20
“தனிச்செங்கோல் கொள்கை சான்ற வறுசமையமும்”
கல்வெட்டு, SII Vol V645.
“சான்றோர் இருந்தவை” – புறநானூறு 266:8.
‘நின்றநீதி வென்றநேமி பழுதில் கொள்கை, வழுதியர் அவைக்கண் அறிவு வீற்றிருந்த செறிவுடை மன்றத்து வான்றோய் நல்லிசைச் சான்றோர் குழு”- அகநானூறு, பாயிரம் – 4.
“சான்றோர் அவை “- பழமொழி நானூறு,86.
“சான்றோர் அவை”- பாரத வெண்பா .56
“வழுதியர் அவை” புறநானூறு, பாயிரம் 2.
வழுதியர் அவை என்பது பாண்டியர் அவையாகும்.
கேரள மாநிலம் கோட்டயம் குமாரநல்லூர் பகவதி கோவிலில் உள்ள 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு “...... இக்கச்சம் பிழைச்சவர் முழிக்களத்து தொழுக்க வின்சான்றாரை பிழைச் சொரிள்ப் படுவிது” என்று கூறுகிறது. முளிக்களம் என்பது நீதிவழங்கும் ,நிர்வாகம் செய்யும் சபையாகும். முளிக்களம் மூளிக்குளம் சத்திரிய சபை என கேரளதேச வரலாறு கூறுகிறது. (Kerala Desa Varalaru, p 9. Edited by T.Chandrasekaran Orient Manuscripts series No.56)
குமரி மாவட்டம்,திருநயினார் குறிச்சி, திருனந்திக்கரைக் கல்வெட்டு “திருநந்திக்கரை பெருமக்களுந் தனியாள்வானு(ங்) கண்குந்தம்பா களத்து கூடி” எனக் கூறுகிறது. மற்றொரு கல்வெட்டில் “இச்செலவு விலக்குவார் முளிக்கள(க) ச்ச ...” எனச் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. (கல்வெட்டு 38F .38G-1969) அரைகுறையாக உள்ள அச்சொல் “முளிக்களகச் சான்றோர்” என இருந்திருக்க வேண்டும். மேற்கண்ட இருகல்வெட்டுகளும் கி.பி. 8 அல்லது 9ஆம் நூற்றாண்டை சார்ந்தவை என தொல்லியல் துறை கூறியுள்ளது. ஆகவே, சத்திரியர் சபையான முளிக்களம்,சேரமான் பெருமாள்களின் காலத்திற்கு முன்பிருந்தும்,அல்லது அவர்களின் ஆட்சிகாலத்திலும், செயல்பட்டுள்ளது என நம்பலாம். சந்தித்தல் என்ற பொருள்படும் மில், மிலி என்ற வடசொல்லிலிருந்து மிலிக்களம் எனப்பட்டு பிற்காலத்தில் முளிக்களம், மூளிக்குளம், என்றெல்லாம் திரிந்துவிட்டது. சத்திரிய பிரபுக்கள் சந்தித்த மன்றமே முளிக்களமாகும்.
“சான்றான் மாட்டுமேனிப் பொன்னும்” – கி.பி 849 ஆம் ஆண்டு கல்வெட்டு. மாடு,மாடா என்பதற்கு செல்வம்,பொன்,லட்சுமி என்றும் பொருள் உண்டு. வீட்டுக்கு வரும் லட்சுமி என்ற பொருளிலேயே ,மருமகளை “மாட்டுப்பெண்” எனக் கூறுகின்றனர். மாடக்காசு – பொற்காசு.
இவ்வாறு, உயர்குடி பிறப்புடைய அரசகுலத்தவரான சான்றோர் அரசராகவும், அமைச்சர் தளபதியாகவும், நீதிபதியாகவும், அசரசருக்கு ஆலோசனை கூறிய வினைக்கடன் சான்றோராகவும், கோவில் நிவாகம், நீர்ப்பாசன நிவாகம் போன்றவற்றைக் கண்காணித்தோராகவும், காசு விடுத்தொராகவும், பொன்னின் தரத்தை நிர்ணயயித்தோராகவும் பணியாற்றி, பிரஜாபரிபாலனம் எனப்படும் நாட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்தனர்.குடிகாவலுக்குத் தேவையான போர்ப் பயிற்சியுடன் மற்ற கல்விகளையும் கற்றுப் பல்வேறு மாண்புகளுடன் விளங்கினர் ( Wearied with the unmeaning ritual and ceremonials prescribed by Brahman priests, the Kshatriyas started new speculation and bold enquiries after the Truth….. and these speculation remained the Hindu philosophical system and religious of a later day…… The bold speculation started by the Kshatriyas is known as the Upanishads….
King Janaka of Videka was the father of the Upanishadic movement. Learned men assembled in his court and held discussions, and the king rewarded them according to their scholarship. Brahmans, in those days sat at the feet of Kshatriya kings to learn the highest wisdom which was known only to kings like janaka.
- R.C Dutt, History of Civilization in Ancient India, Vol. I, p.228.
“The Kshatriyas Kings who were directly concerned with the problems of administration, war and peace, and had to hold their subjects together as leaders and protectors, were naturally more liberal in their outlook and had a greater sense of justice and the equality than the priests, whose governing passion was the exploitation of the religious feelings of the people.
Even in the sphere of philosophy and religions, the Kshatriyas were not disposed to accept without resource the authority of the Brahman priests; much less were they prepared to submit to any curtailment of the royal prerogatives and dignity”
- Swamy Dharma Theertha, History of Hindu Imperialism, p.50. First edition 1941. Lahore 4th edition 1992, Babasahip Ambedkar foundation, Kottayam.
ஆகையால் , சான்றோர் என்றால் மாண்புடையோராய் இருந்த ,கல்வியில் சிறந்தோராயிருந்த, அறம் பிறளாக் கொள்கை சான்ற நற்குடிப் பிறப்பாளராயிருந்த சந்திரியர் என்பது புலப்படும்.
இன்றைக்கு சத்திரியர் என்று தங்களை சொல்லிக்கொள்வோர் இதில் ஏதேனும் ஒரு குணத்தை தங்கள் குணமாக முன்னிருத்துகிறார்களா?
இல்லை, வாளை ஓங்கிப் பிடித்து குதிரையில் செல்வதுபோல் புகைப்படத்தை போட்டு தங்களை சத்திரியர் என்று கூறிக்கொள்கிறார்கள். வாள் ஆணவத்தின் அடையாளம். ஆணவத்தால் அடக்கி ஆண்டவர்களே சத்திரியர்கள் என்ற ஒரு பொய்யான பிம்பம் மக்கள் மத்தியில் உலவுகிறது. அதுவே அவர்கள் சத்திரியர்கள் என்றாலே வெறுக்க காரணமாகிறது.
உண்மையில் ஒரு சத்திரியன் என்பவன் ஆணவத்தால், வீரத்தால் அடக்கி ஆள்பவனல்ல மக்கள் மனதை புரிந்துகொண்டு செயல்படுபவனே, மக்கள் தேவையை அறிந்து கொண்டு “அன்பால்” ஆட்சி செய்பவனே உண்மையான சத்திரியன், சான்றான். ராமனும், கண்ணனும், கிருஷ்ணனும்,அய்யப்பனும் முருகனும் அதனாலேயே இன்றுவரை மக்களால் வணங்கப்படுகின்றனர்...

Monday, June 8, 2015

பதிவு 4 - சான்றோர்களே சத்திரியர்கள்...

சான்றோர்களே சத்திரியர்கள்...



சான்றோர் என்ற உடனே நமக்கு என்ன தோன்றுகிறது?
இன்றைய சமூகம் யாரைச் சான்றோர் என்கிறது?
சால்புள்ளவரை ,அறிஞரை ,அறிவிற்ச் சிறந்த பெரியோர் களை ,நல்லொழுக்கம் உள்ளவர்களை சான்றோர்கள் என நமக்கு இன்றைய சமூகம் அடையாளம்  காட்டுகிறது.
இப்போது நாம் தெரிந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் நமக்கு நம் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ,பெரியவர்கள் என இச்சமூகம் கற்று கொடுத்ததே, அதன் மூலமே நாம் ஒரு சொல்லிற்கு பொருள் கொள்கிறோம். ஆசிரியர் இது பறவை என்று சொல்லித் தந்தாலே நாம் பறப்பனவற்றை பறவை என்கிறோம். ஒருவேளை அது மிதவை என்று சொல்லித் தந்திருந்தால் நாம் மிதவை என்றே கூறியிருப்போம் மறுப்பதற்க்கில்லை.
இன்று நாம் கற்றுத் தேர்ந்தவரை எல்லாம் சான்றோர் என்கிறோம் ,இச்சமூகம் நமக்கு அப்படியே அடையாளம் காண்பிக்கிறது. பண்டைய காலத்தில் சான்றோர் என்பது ஒரு குறிப்பிட்ட சமூகப்பெயராகவே  இருந்தது என்றால் நம்ம முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை.
ஆதாரங்கள் உள்ளன..

தமிழகத்தில் சத்திரியர் கிடையாது என்பது மடமை என்று முந்தைய பதிவுகளில் தெரிந்து கொண்டோம்.சங்கநூல்களில் பிராமணர் என்ற வட சொல் அந்தணர் ,பார்ப்பார் எனவும். ஷத்திரியர் என்ற வடசொல் சான்றோர்,சான்றார் ,சான்றான் எனவும் எழுதப்பட்டுள்ளதை காணலாம்.
சால்பு என்ற சொல்லுக்கும் ஊக்கம், மாட்சிமை, மேன்மை Superiority. Dignity என அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆட்சி செய்தோருக்குச் சால்பு தேவைப்பட்டது. மக்களை வழிநடத்தி அரசுசெலுத்திய சத்திரியருக்கு வீரத்துடன் ஊக்கம்,நேர்மை, பொறுமை போன்ற குணநலன்கள் இருந்தன. ஆகையாலே முன்னாளில் ஆட்சிக்குடியினரான சத்திரியர்களையே தமிழில்  சான்றார் என்றனர்.

கல்வி, ஒழுக்கம் பெற்று நாகரிக பண்பட்ட வாழ்கையை அரசகுலமே மேற்கொண்டிருந்தது.கல்வி,செல்வம்,நாகரிகம்,பண்பாட்டில் பின்தங்கி இருந்த பல்வேறு இன மக்களுக்கும் சான்றாரே “வழிகாட்டிகளாக” விளங்கினர்.

“வழக்கு எனப்படுவது உயர்ந்தோர் மேற்றே,
நிகழ்ச்சி அவர் கட்டு ஆகலான்

- தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல் 93’வது சூத்திரம்.

அதனால் ஒருவனை ஒழுக்கத்திலும் ,பண்பிலும்,கல்வியிலும், போர்த்திறனிலும் உயரவேண்டும் என உணர்த “சான்றோனாகுக” (சான்றானைப் போலாகுக) என்று வாழ்த்தினர். பிற்காலத்தில் வேறுசில குலத்தவரும்,வர்ணத்தாரும் ஆட்சிக்கட்டிலேறிய பின்னர் கற்றுப் பண்புள்ள பெரியவர்களைச் சான்றோர் எனக் கூறும் வழக்கம் உண்டாயிற்று .அதையே இன்றைய சமூகம் நமக்கு, கற்றுத் தேர்ந்தவர்களையே சான்றோர் என்று கூறுகிறது.
ஆனால் உயர்குடிபிறந்தாரே சான்றாண்மை உடையோர்,சான்றாரே ஒழுக்கத்தின் சான்று எனப் பல்வேறு சங்க நூல்களும் உணர்த்துகின்றன.

1.)    “’சான்றாண்மை சாயா லொழுக்க மிவைமூன்றும்
வான்றோய் குடிபிறந்தார்க் கல்லது....” – நாலடியார்

2.)    “நெடுவரை மருங்கிற் குடிமை சான்றோர்” எனவும்
             “வான்தோயும் மலையன்ன சான்றோர்” எனவும் புறப்பொருள் வெண்பாமாலை (173, 185) புகழ்கிறது.
3.)    “குலம்மேம்பட்ட சான்றோர் மகனே” எனப் 10ம் நூற்றாண்டுப் பாடல் கூறுவதும் இதனை உறுதிப்படுத்துகிறது. (தமிழ்நெறி விளக்கம், பொருளியல் உரை பக் 45)


சான்றோர் சத்திரிய குலத்தினர்.

தமிழின் மிகத்தொன்மையான நூலான தொல்காப்பியம் என்ன கூறுகிறது ? கற்றுத்தேர்ந்தொரைச் சான்றார் என்று கூறுகிறதா? அல்ல, சான்றோர் என்ற சொல் அரசகுலத்தவர், உயர் குடியினர் என்ற பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது.
கீழ்காணும் சூத்திரங்களால் அதை உணரலாம்.

1.)    “அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
அந்தமில் சிறப்பின் பிறர்பிறர் திறத்தினும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் மரபியல் 77வது சூத்திரம்.

அந்தணர் என வர்ணத்தை குலத்தைக் கூறி,அடுத்து சான்றோர் எனக் கூறியுள்ளமை வர்ணத்தை,குலத்தையே ஆகும்.


2.)    “அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபினர் அரசர் பக்கமும்
இருமூன்று மரபினர் ஏனோர் பக்கமும்”
- தொல்காப்பியம்,பொருளதிகாரம் புறத்திணையியல் 2௦ 1-3.

என அந்தணர் ,அரசகுலமான சத்திரியர் மற்றும் வைசியர் ,சூத்திரர் ஆகிய நால்வர்ணமும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த சூத்திரத்தில்.

“துகள்தபு சிறப்பின் சான்றோர் பக்கமும்
கட்டில் நீத்த பாலிநாறும்
எட்டுவகை நுதலிய அவையத்தானும்”
எனக் கூறப்பட்டுள்ளது. முதற் சூத்திரத்தில் அரசர் பக்கமும் எனக்கூறி, அடுத்த சூத்திரத்தில் அரசர்குலத்தினை சான்றோர் பக்கமும் எனக் கூறியுள்ளது  எண்ணுக

3.)    “எல்லா பார்ப்பாரும் எல்லாச் சான்றாரும்”
 - தொல்காப்பியம்,சொல்லதிகாரம் பெயரியல் 33வது சூத்திரம்.

4.)    எல்லாக் கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும்”
-தொல்காப்பியம்,எழுத்ததிகாரம்,புள்ளிமயங்கியல் ,28வது சூத்திர உரை .நச்சினார்க்கினியர்.

5.)      “சான்றோர் மாதைத் தக்க வரக்கன் சிறைதட்ட
 ஆன்றோர் சொல்லும் நல்லற மன்னான் வசமானால்...”
- கம்பராமாயணம்,யுத்த காண்டம்,  பிரமோத்திரப் படலம்,215வது பாடல்.

இந்த இராமயணப் பாடலில் ,இங்கு சான்றோர் மாது என்றது, ஜனகனின் மகளானச் சீதையை. ஆகவேச் சான்றோர் மாது என்றதன் பொருள் அரசகுலப் பெண் என்பதாகும். சான்றோர்குலம் –அரசகுலம் (சத்திரிய குலம்)

6.)    அந்தணர் வணிகர் வேளாண்மரபினர் ஆலிநாட்டுச்
சந்தணிபுயத்து வள்ளன் சடையனே அனைய சான்றோர்”
எனத் தனிப்பாடல் ஒன்றில் கம்பன் கூறுகிறான்.அந்தணர்,வணிகர், வேளார் என் மூவகை வர்ணத்தைக் கூறிய கம்பன்,சத்த்ரியரைச் சான்றோர் எனக் கூறியுள்ளமை, சான்றோர் என்பார் சத்திரியர்,அரசகுலத்தவர் என்பதைத் தெளிவாக கட்டுகிறது.

7.)    “தேர்தர வந்த சான்றோ ரெல்லாம்
தோல்கண் மறைப்ப ஒருங்குமாய்ந் தனரே”
- புறநானூறு 63

சேரன் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற்பஃறடக்கை பெருவிறற் கிள்ளியும் போர்க்களத்தில்ப் பட்டுக் கிடக்கையில் பரணர் பாடியது. தேரிலே சென்று போர் செய்தோர் அரசனின் சுற்றத்தாரே.ஆதலின் தேர்வரவந்த சான்றோர் என பாடல் கூறுவது அரசகுலத்தவரான சத்திரியரையே.

8.)    “நோன்புரி தடக்கைச் சான்றோர் மெய்ம் மறை...”
- பதிர்ற்றுப்பத்து ,இரண்டாம் பத்து, குமட்டூர் கண்ணகனார் பாடியது.

போர் வலிமைமிக்க சத்திரிய வீரர்களின் உடலை மறைக்கும் கவசம் போன்றவன் எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. சான்றோர் என்பார் அறிஞர் என்றால் அவர் ஏன் கவசம் அணிய வேண்டும்.

9.)    “கொலக் கொலக் குறையாதத் தானைச் சான்றோர்
வன்மையுஞ் செம்மையும் சால்பும் அறனும்...” பதிற்றுப்பத்து, ஒன்பதாம் பத்து, பாடல் 2.
“தானைச் சான்றோர்” என்ற சொற்றொடர் சேனையிலுள்ள போர்வீரர்களை குறிப்பிடாமல், சேனையை வழிநடத்திய தளபதிகளை,அரசர்களையேக் குறிப்பிடுகிறது. ஆகவே சான்றோர் என்பார் அரசகுலத்தவர் ,சத்திரியர் அல்லாது வேறு யார்?

10.) “மறிந்து தாழ்வன வாசிகள், மாமத வேழம்
தறிந்து வீழ்வன ,தேர்நிரை தகர்வன சான்றோர்
எறிந்த வேலினும் வாளினும் கணையினும் இளைஞர்
துறந்த வாழ்கையை எத்தனை கோடியார் சொல்வார்”
என்பது பாரதம் பாடிய நல்லாப் பிள்ளையின் கூற்று. “இங்கு சான்றோர் எறிந்த வேலினும்,வாளினும்,கணையினும்  ” எனக் கூறப்பட்டுள்ளது. வேலும்,வாளும் அறிஞரிடமும், புலவரிடமும் முதியோரிடமுமா இருக்கும்? அவை பகைஅஞ்சாச் சத்திரியரின் ஆயுதங்களன்றோ.

11.) “கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
பொருதுபுண் ணாணிய சேரலாத
னனிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
இன்னா வின்னுரை கேட்ட சான்றோர்
அரும்பெற லுலகத் தவனொடு செலீஇயர்
பெரும்பிறி தாகியாங்கு”
-    என அகநானூறு கூறுகிறது.

“சோழன் கரிகால் வளவனோடு போரிட்டச் சேரலாதன், விழுப்புண்பட்டுத் தோல்வியுற்றான்.அதனால் சாகும்வரை உண்ணாது வடக்கிருந்தான். அவனோடு சான்றோர் சிலரும் வடக்கிருந்து உயிர் துறந்தனர்”.
வடக்கிருத்தல் சத்திரியருக்கு மாத்திரமே உரிய செயலாகும். சத்திரிய குலத்தில் தோன்றாத புலவரோ ,கற்றவரோ வடக்கிருந்ததாக வரலாறில்லை. ஆகவே இப்பாடலில் சான்றோர் வடக்கிருந்தனர் எனக் கூறப்பட்டது. சேரலாதனின் உறவினரான சத்திரியரையே ஆகும்.



சத்திரியன் இறந்தால் வடக்குத் திசையில் தூக்கிச்செல்ல வேண்டும். பிராமணனை கிழக்கிலும்,வைசியனை மேற்கிலும், சூத்திரனை ஊருக்கு தெற்கிலும் எடுத்துசெல்ல வேண்டும். என மனுநூல் தர்மம் வலியுத்துகிறது..

12.) அரசகுலத் தலைமைகள் சீதை  என்பதை “தலைமை சான்றாள்” எனக்கூறும் கம்பன், 
யுத்தகாண்டத்தில், “சான்றார் மாது” என, எண்ணத்தக்க இடங்களில் கூறியுள்ளார்.

13.) “சான்றோரும் அந்தண ரும்புறஞ் சூழத் தமனியப்பூண்
ஈன்றோர் கொடுப்ப எரிகரி யாயிதழ் தாதகியாம்
தோன்றோய் அலங்கல் உறந்தைக் குலோத்துங்கன் சென்னிவெற்பில்”

-    குலோத்துங்க சோழன் உலா, ஒட்டகூத்தர்.

“இளையானும் மடவாளும் விரும்பிக் கொண்டு வந்த
பார்ப்பார் சான்றார் உள்ளிட்டாருங்கூடி..”

-    சீவகசிந்தாமணி ,நாமகளிலம்பகம்,361 வது செய்யுள் உரை.

மேற்கண்ட இரு பாடல்களும் சத்திரியர்,பிராமணர் என்ற பொருளிலேயே பாடப்பெற்றுள்ளன . சான்றோரை கற்றவர் எனப் பொருள் கூறினால், அந்தணர் கல்லாதவர் எனப் பொருள்படுமன்றோ .
இதுபோல எண்ணத்தக்க பண்டைய நூல் ஆதாரங்கள் ,கல்வெட்டு ஆதாரங்கள் சான்றோர் என்ற சொல் வடமொழி சொல்லான சத்திரியர் என்ற சொல்லுக்கு நிகராகனது என்பதை ஆணித்தனமாக உணர்த்துகின்றன.

ஆனால் இன்று நாம் கற்றுத்தேர்ந்தவர்களை எல்லாம் சான்றோர் என்கிறோம்.
தமிழகத்தில் சத்திரிய வர்ணமே கிடையாது என்று வாதிடுவோரும் உள்ளனர்!
“ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போன்றுதும் , காவிரி நாடன் திரிகைபோல்” என இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் ,பாயிரத்தில் பாடியிருப்பதன் காரணம் என்ன? காவிரிநாடனான சோழன் சூரிய குலத்தவன் என்பதால் அல்லவா ? அதைப் போன்றே “திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், பொங்கு அலர்தார் சென்னி” எனப் பாண்டியனை வாழ்த்தியதும், பாண்டியர் சந்திர குலத்தவர் என்பதனாலே ஆகும்.

பாண்டியரும் , கி.பி 9 ஆம் நூற்றாண்டு முதல் தம்மைச் சந்திரகுலம் என்று கூறிடத் தவறியதில்லை. அவர்களின் செப்பேடுகளும் ‘மதிகுலம்’ என்றேக் கூறுகின்றன. தக்கையாகபரணி சோழரைச் சத்திரியர் எனவும், பாண்டியரை பிரம்மசத்திரியர் அதாவது முதன்மையான சத்திரியர் எனவும் கூறுகிறது.

இதிகாச காலம் முதல் சந்திர ,சூரிய குலங்களே சத்திரிய குலங்களாக அங்கீகரிக்க பட்டிருந்தன. சங்க காலத்தில் சத்திரியரின் ஆட்சிகளே நடைபெற்றுவந்ததால், அவர்கள் தம்மைச் சத்திரியர் என வேறுபடுத்திக் காட்டிக்கொள்ளவில்லை. அதற்காக அவர்கள் சத்திரியர் அல்லர் என்று பொருளல்ல! இராசசூயம் போன்ற யாகங்கள் அவர்களால் செய்யமுடிந்தமை, சத்திரியர் என்பதாலேயேயாம் . பிற்காலத்தில் பல்லவர் போன்ற வேறு பலரும் ஆட்சிக்கு வரநேர்ந்ததால், தம்மைச் சத்திரியர் எனக் கூரவேந்தியக் கட்டாயம் இவர்களுக்கு ஏற்ப்பட்டது  அதற்காக, வடநாட்டவரை பார்த்துத், தமிழ் மன்னர்களும் சந்திரகுலம், சூரியகுலம் , சத்திரியர் என்றெல்லாம் கூரிக்கொள்ளலாயினர் என்பது அறிவின்மையாகும். இருநூறு, முன்னூறு ஆண்டுகள் கூடத் தாக்குப்பிடிக்காத வடநாட்டு அரசகுலன்களைப் பார்த்து ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சேர சோழ பாண்டியர் வேடமிடத் தேவையில்லை. சூத்திர குலங்களும் ,வைசியரும், புறங்கடையில் வந்தோரும் சிற்சில இடங்களில் அதிகாரத்தைப் பிடித்ததால் இவர்கள் சத்திரியர்கள் எனக் கூறிட நேர்ந்தது. ஆகவே தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர் சத்திரியர் என்பதையும் சான்றோர்,சான்றார்  என்ற தமிழ்ச் சொலுக்கு இணையான சொல்லே வடமொழி சொல்லான  “சத்திரியர்” என்பதை உணர்ந்துகொள்ளுதல் அறிவுடமையாம்.


அடுத்த பதிவில் சான்றோரே சத்திரியர் என்பதற்கான ஆதாரமாக, அவர்கள் நடத்திய பண்பட்ட மேம்பட்ட வாழ்கையையும்  சான்றோரின் குணநலன்களாக சங்க நூல்கள் கூறுவதைக் காண்போம்.